நாலடியார் - கல்வி
கல்வி அழகே மிக உயர்ந்த அழகு
தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும்
அழகும், முந்தானையில் கரையிட்ட
அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல.
மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத்
தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.
அறியாமையைப் போக்கும் மருந்து
கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால்
குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்;
(தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப்
போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.
உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல்
களர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர், நல்ல நன்செய் நிலத்தில்
விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கருதுவர். அதுபோலக் கீழ்க்குடியிற்
பிறந்தவர்களானாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில்
வைத்து மதித்தல் வேண்டும்.
மக்கட்கு சேர்த்து வைக்கத்தக்க 'செல்வம்'
வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து
கொள்ள இயலாது; தமக்குக் கிடைத்துப்
பிறருக்குக் கொடுத்தால் அழிவதில்லை; மேலான படை வலிமையையுடைய
மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால், ஒருவன்
தன் மக்கட்குப் 'செல்வம்' எனச்
சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல!
சிறந்த நூல்களை கற்க
நாம் கற்கவேண்டிய நூல்கள்
மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால்
இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்.
அறிவு நூல்கள் கற்றவர் துணை
படகுசெலுத்துவோன் பழைமையான சாதிகளில், நினைக்குமிடத்துக்
கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணியாராய் அவன் துணையாக ஆற்றைக் கடந்துபோன
தன்மையை ஒக்கும். அறிவு நூல்கள் கற்றபெருமகனொருவன் துணையாக
மெய்ப்பொருள்களைஅறிந்து கொள்ளுதல்.
தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம்
அழிதலில்லாத பழைமையான
நூற்கேள்விப் பேறுடையராய் முரணிலராய்க்கூரறிவுடையராய் விளங்கும் கற்றோருட்
சேர்ந்து அளவளாவி மகிழ்தலினும் இனிமையுடையதாயின், அகன்ற விண்ணின் மேலிடத்தில் உறையுந் தேவர்களின் திருநகரைக் காண
முயல்வோம்.
நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப்போன்று இனிமை தரும்
ஒலிக்கும் கடலின் குளிர்ந்த
துறைவ!. கற்று மெய்ப்பொருள் அறிந்தொழுகுவாரது நேயம்கரும்பை அதன் நுனியிலிருந்து
தின்று சுவைப்பதைப்போன்றது நுனியை
விடுத்து அடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்றதன்மையையுடையது அக் கல்விப்
பண்பும் அன்பும்இல்லாதவரது நேயம்.
கல்லாதவரே யாயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகுதல்
தாம் கல்லாதவரே யாயினும் கற்றாரைச்
சேர்ந்து பழகினால் பண்பட்டமெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்; இயற்கைமணச் சிறப்பினையுடைய விளக்கமான
நிறம்அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதியமட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்குத் தான்அம்மணத்தைத்
தந்தாற்போல.
பிறவித் தடுமாற்றம்
நீங்க உலக நூலறிவு
அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக
வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல என்றுஇரையும் அவ்வளவேயல்லால், அவ் உலக நூலறிவு கொண்டுபிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர்
யாண்டும் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக