அகநானூறு: 4

 அகநானூறு: 4

களிற்றியானை நிரை

முல்லைத்திணைப் பாடல் - தோழி கூற்று

தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.

அவன் வரும் தேரிலுள்ள மணி ஒலிக்காமல் இருப்பதற்காக அதன் நாக்கை கட்டி வைத்துக்கொண்டு அவன் தேரில் வருகிறான். மணியின் ஒலி மலரில் தேன் உண்ணும் வண்டுகளைத் துன்புறுத்துமாம்.தலைவன் கருணை

பூவுக்குள் உறங்கும் ஆண்-பெண் வண்டுகள் தேரின் மணியொலி கேட்டு அஞ்சாவண்ணம் தேர்மணியின் நாக்கைக் கட்டிவைத்துக்கொண்டுள்ள தேரில் அவன் (தலைவன்) வருகிறான், என்கிறாள் தோழி, தலைவியிடம்.

முல்லை அரும்பு விட்டிருக்கிறது. இல்லம், கொன்றை ஆகிய மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முருக்கியிருக்கும் இரும்பு போன்ற முருக்குக் கொம்புகளை உடைய இரலைமான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. உலகம் புலம்புவதைக் கைவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மேகத் தொகுதி பெருமழை பொழிந்து காடெல்லாம் கருமை நிறத்துடன் கவின் (அழகு) பெற்றுத் திகழ்கிறது.

அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான்.

அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான். வாங்கி வளைந்து அரி அரியாகப் பூத்து உதிரும் நிலையில் இருக்கும் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாக உறங்கும் தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்க அவ்வாறு அவன் மணிநாக்கைக் கட்டிவைத்திருக்கிறான். அப்படிக் கட்டிவைக்கும் வாய்ப்பு இருக்கும் சிறந்த தேர் அது.

அவள் (தலைவி) தெரிந்தெடுத்த வளையல் அணிந்தவள். அரிவை பருவத்தள். அவள் காந்தள் பூவைப்போல் மணக்கும் நறுமண மேனியை உடையவள். எப்போதும் விழாக்கோலமாக விளங்கும் உறையூருக்குக் கிழக்கில் உள்ள உயர்ந்த பெரிய குன்றத்தில் மலர்ந்திருக்கும் காந்தள் பூப் போன்ற மணம் அந்த மேனிமணம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

இலக்கியத்தில் பெண்கள்

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை