நாலடியார் - சுற்றந்தழால்

 



முனைவர் ப.செல்வி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை - 641044


நாலடியார்  -  சுற்றந்தழால்

 

சுற்றத்தாரை எப்போதும் தழுவியொழுகுதல் வேண்டும்

        கருவுற்றபோது தோன்றிய வேட்கைத்துன்பமும், இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும்தாய் தன் தொடையில் மகனைக் கண்டுமறந்துவிட்டாற்போல, முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்ததுன்பம், ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கும்.

 தாளாண்மை மிக்க மகனின் கடமை

வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர்கட் கெல்லாம் ஒப்ப உதவும் நிழல்மரத்தைப்போல், வறுமையின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர் கட்கெல்லாம் சமம் பொருந்தக்காத்து பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்உதவுதல்போல்1 பலரும் பயன் நுகரப் பொருள்உதவி, தான் மேன்மேலும் பொருளீட்டும்முயற்சியால் உழைப்புடையனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.

 தம்மைச் சேர்ந்தவரைஆதரித்து நிற்றல்

 ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே, தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்றுகூறார் பெரியோர், மேலுமேலும் வலிமைமிக்ககாய்கள் பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத்தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில் இல்லையே.

சுற்றத்தாரைத்தாங்குவோர் தொடர்பே உலகுக்கு இனிது

யாவரும். அறியும்படி முழுதும் இணங்கிநேசங் கொண்டாலும், கீழோர் தொடர்புகள்நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில நாட்களேநிற்கும் தளர்ச்சியில்லாதவரது தொடர்பு, இயல்பாகவே தமதுபெருந்தன்மையான நிலையில் திரியாமல் நிற்கும்பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்துபொருந்த அதன்கண் அழுந்தநின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது.

அனைவர்க்கும் தலைவராதற்குரியர்

இவர் இவ்வளவினர்; இவர் எம்மைச் சேர்ந்தவர், இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் சிறிதும் இலராகிய தன்மையினால், நிலையிழந்த மக்களின் இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே, அனைவரிடத்தும் மேன்மக்களாகக் கருதப்படும் இயல்புடையவராவர்.

 சுற்றத்தார் எளியவராயினும் அவரே நன்மை தருபவர்

பொன்னாலானஉண்கலத்தில் இட்டுவைத்த புலியின்நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, சர்க்கரையோடும் பாலோடும், மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து,  உண்ணுதலைவிட, உப்பும் இல்லாததான புல்லரிசிக்கஞ்சியை, உயிர்போன்றசுற்றத்தாரிடமிருந்து, எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று.

சுற்றத்தார் உதவியே இன்பந்தரும்

காலத்தில் பெற்றாலும் தம்உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய சூடானகறியுணவு வேப்பங்காயை ஒத்தது நீ கேள் ; பிற்பகற்போழ்தில் கீரையுணவு இடுவராயினும் உறவினரானோரிடமே இனிமையாயிருக்கும்.

 உற்ற நேரத்திற்கைவிடாத உறவினரை நாமும் கைவிடாமல் இருக்க வேண்டும்

கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும்வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறுபிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டுவிடுவர்; ஆனால் உறவானவரெனப் படுவோர்அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக்கோல்போல் தம்முடன் எரியும் புகுந்து உடன்துன்புறுவர்.

துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும்

 சிறந்த மலர்களால் தொடுக்கப்பட்ட குளிர்ந்தமாலையை யணிந்த மாதே, உறவினர்க்கு உறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ? இறக்கும் வரையிலும் அவ்வுறவினர் இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்து அவர் துன்புறும் போது நாமும் துன்புற்று அவர் துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

அமிழ்தம் போன்றது

அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்துஉண்ணுகின்ற, பூனைக் கண்போன்ற ஒளிமிக்க சூடானபொறிக்கறியுணவும் வேப்பங் காய்போல வெறுப்புத்தரும்; அன்புடைய தன்னொத்தார் வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக்கஞ்சியும் உடம்போடு பொருந்திய அமிழ்தமாகும்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

இலக்கியத்தில் பெண்கள்

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை